பெங்களூரில் அதிரடி: மரங்களை காவு வாங்கிய விளம்பர பேனர்கள் அகற்றம்
பெங்களூருவின் புறநகர் பாதையில் சட்டத்துக்கு விரோதமாக அமைக்கப்பட்ட இரண்டு விளம்பர பேனர்களை அகற்றி தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பெங்களூர்: பெங்களூருவின் புறநகர் பாதையில் சட்டத்துக்கு விரோதமாக அமைக்கப்பட்ட இரண்டு விளம்பர பேனர்களை அகற்றி தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பெங்களூரில் ரிங் ரோடு பகுதியில் இருந்த 27 மரங்கள் ஆசிட் ஊற்றியும், வெட்டியும் அகற்றப்பட்டன. இது குறித்த புகார்களை விசாரணை செய்த தோட்டக்கலைத் துறையினர், மரங்கள் வேண்டும் என்றே ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருப்பதும், இரவோடு வெட்டப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதற்குக் காரணத்தை ஆராய்ந்த போது தோட்டக்கலைத் துறைக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது, அந்த முக்கியச் சாலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு விளம்பரப் பலகைகளே அதற்குக் காரணம். சாலையின் தடுப்புப் பகுதியில் இருக்கும் அந்த மரங்களால், இந்த விளம்பரப் பலகைகள் பொதுமக்களின் கவனத்தில் இருந்து மறைந்து விடும் என்பதால், மரங்களுக்கு தண்ணீருக்கு பதிலாக ஆசிட் ஊற்றப்பட்டுள்ளது.
Advertisement
அந்த விளம்பரங்கள் வேறு ஒன்றும் இல்லை, பீமா ஜுவல்லரி, ஐபோன் 7 நிறுவனங்களின் விளம்பரப் பலகைகள்தான். தாங்கள் பல லட்சம் செலவிட்டு வைத்த பேனரைவிட இந்த மரங்களா முக்கியம் என்று அவற்றுக்கு சாவு மணி அடித்ததோடு, அதையும் யாருக்கும் தெரியாத வகையில் கொடூர எண்ணத்தோடு ஆசிட் ஊற்றியிருப்பது அங்குள்ள பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
உடனடியாக நடவடிக்கை எடுத்த தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், நகைக் கடையின் விளம்பரத்தை உடனடியாக அகற்றிவிட்டனர். ஃபோன் விளம்பரப் பலகையும் நேற்று அகற்றப்பட்டுவிட்டது.
இது ஒரு துவக்கமாக எடுத்துக் கொண்டு மரங்களை வெட்டி எடுத்து வைக்கப்பட்ட விளம்பர பேனர்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தோட்டக்கலைத் துறையின் அதீத முயற்சியால் ஆசிட் ஊற்றி பாதிக்கப்பட்ட 17 மரங்களில் 3 மரங்களை காப்பாற்றிவிட்டனர். அவை துளிர்க்க தொடங்கி விட்டன.