பெங்களூரு: காலநிலை முன் அறிவிப்புகளை அலைபேசிகள் வழியாக இணைய வசதி இல்லாமலேயே பரிமாறிக் கொள்ள உதவும் புதிய வசதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
உலக அளவில்புகழ்பெற்ற மென்பொருள் தயாரிப்பு சேவை நிறுவனமான ஐ.பி.எம், தனது துணை நிறுவனமான 'தி வெதர் கம்பெனி' உடன் இணைந்து நாட்டின் முதல் அலைபேசி வழி எச்சரிக்கை முறையை கண்டுபிடித்துள்ளது. 'பீர் டு பீர் கம்யூனிகேஷன்' முறையில் செயல்படும் இந்த செயலியானது, இணைய சேவையில்லாத இடங்களிலும், அலைபேசி சிக்னல் இல்லாத இடங்களிலும் தகவல் பரிமாற்றத்திற்கு உதவுகிறது. இதனைக் கொண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காலநிலை பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும்.
இதுகுறித்து 'தி வெதர் கம்பெனி' நிறுவனத்தின் இந்திய விற்பனை பிரிவு தலைவர் ஹிமான்சு கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்த புதிய முறையானது அருகருகே உள்ள அலைபேசிகளை கொண்டு உருவாக்கப்படும் 'மெஷ் நெட்ஒர்க்' என்னும் வலைப்பின்னலை முறையில் 'பீர் டு பீர் கம்யூனிகேஷன்' தகவல் தொடர்பு முறையினை பயன்படுத்துகிறது.
இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நெட்ஒர்க்கில் உள்ள அலைபேசிகள் ஒவ்வொன்றுமொரு தனித்த 'நோட்' எனப்படும் இணைப்பானாக செயல்படும். இவை மற்றொரு அலைபேசியுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும். இவற்றைக் கொண்டு ரகசிய தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடலாம். இதன் காரணமாக அலைபேசி சிக்னலுக்கோ, இணைய சேவை பயன்பாட்டிற்கோ தேவையிருக்காது. இந்த நெட்ஒர்க்கை நாம் விரிவுபடுத்திக் கொண்டே செல்லலாம்.
இதனை பயன்படுத்தி இணைய சேவையில்லாத இடங்களிலும், அலைபேசி சிக்னல் இல்லாத இடங்களிலும் தகவல் பரிமாற்றத்தினை உருவாக்க முடியும்.
இவ்வாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டு சர்வதேச தகவல்தொடர்பு யூனியன் என்னும் அமைப்பின் மூலமாக எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில், இந்தியாவில் 75 சதவீதம் பேர் இன்னும் இணையப்பயண்பாட்டை பற்றிய அறிவோ வசதியோ இல்லாமல் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு பெரிய வரப்பிரசாதமாக அமையும்.