காஷ்மீரில் கடும் சண்டை: பயங்கரவாதி உள்பட 4 பேர் சாவு
மத்திய காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
மத்திய காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக, போலீஸார் தெரிவித்ததாவது: பட்காம் மாவட்டம், சதூரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை அதிகாலை அங்கு சென்று தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். சதூராவை சுற்றி வளைத்த போலீஸார், அப்பகுதியை முழுவதுமாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது, சதூராவுக்கு உள்பட்ட தூர் பாக் பகுதியிலிருந்து திடீரென வெளிப்பட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்தச் சண்டை தொடர்ந்து பல மணி நேரத்துக்கு நீடித்தது. இதில், பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அங்கிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த துப்பாக்கிச் சண்டையின்போது, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி இடையூறு ஏற்படுத்தினர். தொடர்ந்து, மேலும் பலர் அங்கு திரண்டு வந்து பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசினர். கல்வீச்சில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைப்பதற்காக கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.
எனினும், இந்தக் கிளர்ச்சியின்போது 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும், 18 பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர். முன்னதாக கல்வீச்சு தாக்குதலின்போது, இளைஞர் ஒருவரின் கழுத்தில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. உயிரிழந்தவர்கள் ஜாஹித் தார், சாகிப் அகமது, இஷ்ஃபாக் அகமது வானி ஆகிய மூவர் என்பது தெரியவந்துள்ளது. மூவரும் 20 வயதுக்கு உள்பட்டவர்கள் ஆவர் என்று போலீஸார் தெரிவித்தனர்.