மத்தியில் இடைத்தேர்தலா? வெங்கய்ய நாயுடு பதில்
மத்திய அரசு தனது முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யும். இடைத்தேர்தல் வரப்போகிறது என்ற செய்தி வெறும் வதந்தியே
ஹைதராபாத்: மத்திய அரசு தனது முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யும். இடைத்தேர்தல் வரப்போகிறது என்ற செய்தி வெறும் வதந்தியே என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஹைதராபாதில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்தியில் 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்வதற்கு பாஜக-வுக்கு மக்கள் வாய்ப்பளித்தனர். இதன்படி, மத்திய அரசு தனது முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யும். இடைத்தேர்தல் வரப்போகிறது என்ற செய்தி வெறும் வதந்தியே.
வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும்படி, கட்சித் தலைவர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் கேட்டுக் கொண்டுள்ளனர். அந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது தான் எங்களது லட்சியம்.
தாழ்த்தப்பட்டவர்களை வகைப்படுத்துவது தொடர்பாக ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாதிரியான நிலைப்பாடு நிலவுகிறது.
இதுதொடர்பாக, நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில், மாநில அரசுகளுடன் மத்திய அரசு விவாதிக்க வேண்டியுள்ளது.
ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் மிளகாய் பயிரிட்டுள்ள விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகள் தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சருடன் பேசியுள்ளேன். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
முத்தலாக் விவகாரம் என்பது மத ரீதியிலான பிரச்னை கிடையாது. முஸ்லிம் மத விதிகளின்படி, இதற்கு முழுமையான ஒப்புதல் கிடையாது. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக மௌனம் காத்தது. எனவே, இதை அரசியலாக்கக் கூடாது என்றார் வெங்கய்ய நாயுடு.