முகப்பு
இந்தியா

இஸ்ரோவின் 11 ஆவது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக செலுத்த விஞ்ஞானிகள் தீவிரம்

ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தொடர் முயற்சியில் இதுவரை 5 முறை வெற்றியும், 5 முறை தோல்வியும் கிடைத்துள்ளது

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:26 PM
பகிர்:

ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தொடர் முயற்சியில் இதுவரை 5 முறை வெற்றியும், 5 முறை தோல்வியும் கிடைத்துள்ளது. இந்த விஷயத்தில் வெற்றி, தோல்வி சமநிலையில் இருப்பதால், இந்த முறை ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியே ஆக வேண்டும் என்பதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை ஜி.எஸ்.எல்.வி.-எஃப் 09 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் மூலம் 'ஜிசாட் 9' செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதன் மூலம் 11 -ஆவது முறையாக ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புகிறது இஸ்ரோ. இதுவரை 10 முறை ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை அனுப்பியதில் 5 முறை இஸ்ரோவுக்கு தோல்வி கிடைத்துள்ளது.
இதன் காரணமாக வெள்ளிக்கிழமை அனுப்பப்படவுள்ள 11 -ஆவது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்த வேண்டும் என்பதில் விஞ்ஞானிகள் தீர்மானமாக உள்ளனர்.
ஜி.எஸ்.எல்.வி. என்றால் என்ன?: Geosynchronous Satellite Launch Vehicle என்று தொழில்நுட்ப மொழியில் சொல்லப்படுகிறது.
இஸ்ரோவின் 'இன்சாட்' மற்றும் 'ஜிசாட்' வகை செயற்கைக்கோள்களை விண்வெளியில் அதற்குரிய இடத்தில் கொண்டு சேர்க்கும் வேலையைதான் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் செய்கிறது.
நம் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு மற்ற முன்னேறிய நாடுகளின் ராக்கெட்டுகளை நாம் பயன்படுத்த வேண்டுமானால் பல்லாயிரம் கோடி செலவாகும். ஜி.எஸ்.எல்.வி. நம்முடைய தொழில்நுட்பம், நம்முடைய நிபுணர்களால் செயல்படுத்தப்படுவது என்பதால் சிக்கனமானது.
ஜி.எஸ்.எல்.வி. உருவான கதை: ஜிசாட் (Geosynchronous
 satellites)   செயற்கைக்கோள்கள், ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. இந்தச் செயற்கைக்கோள்களை உருவாக்ககூடிய நாடுகளால், அவற்றை விண்ணுக்கு ஏவும் ராக்கெட் தொழில்நுட்பத்தை உருவாக்க முடியவில்லை.
1990 -ஆம் ஆண்டு இந்தியா தனது செயற்கைக்கோள்களை தானே செலுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்ப திட்டத்தை முன்னெடுத்தது. அதற்கு முன்பு இதுபோன்ற தொழில்நுட்ப உதவிகளை நமக்கு சோவியத் யூனியன் செய்து வந்தது. சோவியத் யூனியன் உடைந்த பின்பு இஸ்ரோ உள்நாட்டிலேயே ராக்கெட் தயாரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டது.
ஏற்கெனவே பி.எஸ்.எல்.வி. (Polar Satellite Launch Vehicle)
தொழில்நுட்பத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் திறமையானவர்கள். ஜி.எஸ்.எல்.வி.யை இயக்கிடும் கிரையோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பத்தை நமக்கு மற்ற நாடுகள் தர மறுத்தன. எனினும், ஏற்கெனவே இஸ்ரோ வைத்திருந்த ரஷிய எஞ்ஜின்களை வைத்து, 2001 -ஆம் ஆண்டு ஏப்ரல் 18 -ஆம் தேதி முதல் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
கிரையோஜினிக் எதனால்?: பி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளால், செயற்கைக்கோள்களை சுமந்தபடி மிக குறுகிய தூரம் மட்டுமே பயணிக்க முடியும். இதனால் சில நூறு கிலோ மீட்டர்கள் உயரத்தில்தான் செயற்கைக்கோள்களை நிறுவமுடியும்.
ஆனால், தகவல்தொடர்பு வசதிகளுக்கு செயற்கைக்கோள்களை 30 ஆயிரம் கி.மீ.க்கு மேல் நிலைநிறுத்தியாக வேண்டும். மிகவும் சக்திவாய்ந்த இயந்திரங்களை பொருத்தினால் மட்டுமே இவ்வளவு உயரத்துக்கு ராக்கெட்டை அனுப்பமுடியும். இதற்கு ஜி.எஸ்.எல்.வி.தான் ஒரே தீர்வு மைனஸ் 183 டிகிரிக்கு குளிரூட்டப்பட்ட ஆக்சிஜன், மைனஸ் 253 டிகிரிக்கு குளிரூட்டப்பட்ட ஹைட்ரஜன் ஆகியவைதான் கிரையோஜெனிக்கின் எரிபொருள். ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் திரவநிலையில் இருக்கும். ராக்கெட் ஏவப்படுவதற்கு முன்பான 30 நொடிகள் வரை இந்த எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டே இருக்கும்.
கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் நாம் சிறந்து விளங்கினால்தான் எதிர்காலத்தில் மிகப்பெரிய செயற்கைக்கோள்களை விண்ணுக்கு கொண்டு செல்ல முடியும் என்பதுடன், விண்கலங்களையும் செலுத்த இயலும். வெள்ளிக்கிழமை ஏவப்படும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்துவது நமது விண்வெளி திட்டங்களுக்கும் மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments