புதுதில்லி: இனி இந்தியாவில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வாக்காளர எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டு எந்திரங்கள் நம்பகத்தன்மை இல்லாதவை, அவற்றில் மாற்றம் செய்து தேர்தல்ம முடிவுகளில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் அவர்களின் இந்த கருத்தினை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இந்த விவகாரம் குறித்தும், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தும் அனைத்துக் கட்சிகளிடமும் விவாதிக்க ஏற்ற வகையில் தேர்தல் கமிஷன் தில்லியில் இன்று ஒரு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்த கூட்டத்துக்கு பா.ஜனதா, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 7 தேசிய கட்சிகளுக்கும், அங்கீகரிக்கப்பட்ட 48 மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 7 தேசிய கட்சிகள் மற்றும் 35 பிராந்திய கட்சிகள் கலந்துக் கொண்டன.
கூட்டத்தின் முடிவில் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இனி இந்தியாவில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வாக்காளர எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். ஏற்கனவே தேர்தல் ஆணையம் இயந்திரங்களை வாங்க முடிவுசெய்து, மத்திய அரசிடம் நிதியும் பெற்று உள்ளது. இதற்கிடையே மின்னணு ஓட்டு எந்திரங்களை 'ஹேக்கிங்' செய்ய முடியும் என குற்றம் சாட்டும் அரசியல் கட்சிகள் அதனை செய்துக்காட்டவும் வெளிப்படையாக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
விரைவில் நடைபெற உள்ள குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் தேர்தல்களில் இத்தகைய இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.