கேஜரிவால் மீது மேலும் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு அருண் ஜேட்லி வழக்கு
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மேலும் 10 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடக்கோரி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மேலும் ஒரு
புதுதில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மேலும் 10 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடக்கோரி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று மேலும் ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.
தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக கடந்த 2000 முதல் 2013 வரை அருண் ஜேட்லி பொறுப்பு வகித்தார். அப்போது, அவர் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்பட ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டில் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, கேஜரிவால் உள்ளிட்டோரிடம் ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு, தில்லி உயர் நீதிமன்றத்தில் ஜேட்லி அவதூறு வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கில், கேஜரிவால் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதிட்டு வருகிறார்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற இணைப் பதிவாளர் தீபாலி சர்மா முன்னிலையில் ஜேட்லியிடம் ராம் ஜெத்மலானி கடந்த புதன்கிழமை குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது, ஜெத்மலானி பயன்படுத்திய ஒரு வார்த்தைக்கு ஜேட்லி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், கேஜரிவாலின் ஒப்புதலுடன் அந்த வார்த்தையை பயன்படுத்தினீர்களா? என்று ஜெத்மலானியிடம் ஜேட்லி கோபத்துடன் கேள்வியெழுப்பினார். அதற்கு, ஆமாம் என்று ஜெத்மலானி பதிலளித்தார்.
மேலும், தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள் தொடர்பாக, ஒரு வார இதழுக்காக தான் எழுதிய கட்டுரையை வெளிவரவிடாமல் செய்துவிட்டதாக ஜேட்லி மீது அவர் குற்றம்சாட்டினார். ஆனால், வழக்குக்கு சம்பந்தமில்லாத விஷயங்களைத் தெரிவிப்பதாக, ஜெத்மலானிக்கு ஜேட்லி தரப்பு வழக்குரைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் ஜெத்மலானி முன்வைத்தார். இரு தரப்புக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஜெத்மலானியும், இதர வழக்குரைஞர்களும் எல்லை மீறிச் செல்வதாக கண்டித்த துணைப் பதிவாளர், அடுத்தகட்ட குறுக்கு விசாரணையை ஜுலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில், தன்னை அவதூறாக விமர்சித்ததற்காக அரவிந்த் கேஜரிவால் தனக்கு மேலும் பத்து கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தில்லி நீதிமன்றத்தில் இன்று அருண் ஜேட்லி மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.