இறைச்சிக் கூடங்களுக்கு தற்போது தடை விதித்திருக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசு, இனி, மீன் சாப்பிடுவதற்கும் தடை விதிக்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இறைச்சிக் கூடங்களுக்காக சந்தைகளில் இருந்து பசுக்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் மத்திய அரசு தடை விதித்திருப்பதை சுட்டிக் காட்டி, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினரான அவர், தனது முகநூல் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பசுவினங்களை வாகனங்களில் கொண்டு செல்வோர் மீது, சங்க பரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
அவர்களைத் தடுப்பதற்குப் பதிலாக, இறைச்சிக் கூடங்களுக்கு பசுக்களை விற்பதற்கு மத்திய அரசு ஒட்டு மொத்தமாகத் தடை விதித்திருக்கிறது. இதிலிருந்து யாருடைய பிடியில் மத்திய அரசு உள்ளது என்பது தெளிவாகிறது.
நாட்டில் கோடிக்கணக்கான மக்கள், மாட்டிறைச்சியை உணவாக சாப்பிடுகிறார்கள். சமூகத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு சிறந்த சத்துமிக்க உணவாக மாட்டிறைச்சி பெரும் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், இந்தத் தடை உத்தரவின் மூலம், மக்களின் உணவு உரிமையில் மத்திய அரசு தலையிடுகிறது.
மத்திய அரசின் நாகரிகமற்ற இந்த முடிவுக்கு எதிராக, மக்கள் ஒன்றிணைந்து தங்களது கோபத்தை வெளிப்படுத்த வேண்டும். அரசின் இந்தத் தடை உத்தரவால் லட்சக்கணக்கானோரின் வேலை வாய்ப்பு பறிபோகும்.
தற்போது இறைச்சிக் கூடங்களுக்கு தடை விதித்திருக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசு, இனி, மீன் சாப்பிடுவதற்கும் தடை விதிக்கும்.
நாடு முழுவதும் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் தோல் பதனிடும் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தலித் சமூகத்தினர் ஆவர். அரசின் தடை உத்தரவால், அவர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.