இந்தியத் தொழில் வளர்ச்சிக் கருத்தரங்கம் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உலக வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் உலக வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா பேசியதாவது:
சுலபமாக தொழில் செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 30 இடங்கள் முன்னேறி இருப்பது வரவேற்கத்தக்கது. அதற்காக எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொறுமை இருந்தால் மட்டும்தான் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியும்.
தற்போது அத்தகைய ஒரு நிகழ்வைத்தான் நாம் இந்தியாவில் காண்கிறோம். இது மிகவும் அற்புதமான செயலாகும். வரும் காலங்களில் இந்தியாவின் பொருளாதாராம் பெரிய அளவிலான வளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது இந்தியாவில் வரி செலுத்துவது மிகவும் சுலபமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த பொருளாதார சீர்திருத்தம் அபாரமாக உள்ளது என்றார்.
பின்னர் இந்தியப் பரிதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
சாமானிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்துடனே இந்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனால் தான் இதன் வெற்றி சாத்தியமானது.
உலக வங்கியின் இந்த தரவரிசைப் பட்டியலில் உயர்வது என்பது மக்களின் வாழ்க்கை முறை எளிமையாக்கப்பட்ட உயர்வுக்குச் சமமானது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவின் வரி செலுத்தும் முறை எளிமையாக்கப்பட்டு, வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நமது பொருளாதாரம் சிறப்பாக முன்னேறி வருகிறது. அதிக இளைஞர்களைக் கொண்ட இந்திய நாட்டில் வேலைவாய்ப்பு அதிகளவில் ஏற்படுத்துவது என்பது சற்று சவாலான காரியம் தான். இருப்பினும், உலக தொழில்துறை உற்பத்தியில் இந்தியாவில் தான் அதிகளவிலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகளவிலான இளம் தொழில்முனைவோர் உருவாகி வருகின்றனர்.
இந்தியாவின் தொழில்வளர்ச்சி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்படுகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் திறனை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதில் செயல்பட்டு வருகிறோம். மாற்றமும், முன்னேற்றமும் தான் எங்களின் லட்சியம். எங்கள் பணியை மேலும் சிறப்பாகச் செய்து முடிப்பதில் தான் தற்போது முழு கவனம் உள்ளது என்றார்.