ஒப்பந்த விதிமீறல் வழக்கு: அதிமுக முன்னாள் எம்.பி.க்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை
ஒப்பந்த விதிகளை மீறியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், நேரில் ஆஜராகுமாறு அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிச்சாமிக்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
ஒப்பந்த விதிகளை மீறியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், நேரில் ஆஜராகுமாறு அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிச்சாமிக்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு விவரம்:
ஒப்பந்த விதிகளை மீறிய வழக்கில், கே.சி.பழனிச்சாமி, வரும் 28-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். தவறினால், பிணையில் வெளிவர முடியாத அளவில் அவருக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்படும். மேலும், அவரது சொத்துகள் முடக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (தி ஹிந்து) துணை நிறுவனமான ஸ்போர்ட்டிங் பாஸ்டைம் இந்தியா லிமிடெட் நிறுவனம், கே.சி.பழனிச்சாமிக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், அதற்கான தொகையை கே.சி.பழனிச்சாமி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் (என்சிஎல்ஏடி) கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனம் முறையிட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம், கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்துக்கு சேர வேண்டிய தொகையை கொடுக்குமாறு கே.சி.பழனிச்சாமிக்கு கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பழனிச்சாமி, மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.