முகப்பு
தற்போதைய செய்திகள்

திமுக ஆட்சியில் 6 வயது குழந்தையிலிருந்து 60 வயது முதியவர்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லை: சீமான் விமர்சனம்

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் ஆறு வயது குழந்தையிலிருந்து 60 வயது முதியவர்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என சீமான் கூறியது தொடர்பாக...

Updated On : 14 மார்ச், 2026 at 8:20 AM
திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்..
பகிர்:

திருச்சி: திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் ஆறு வயது குழந்தையிலிருந்து 60 வயது முதியவர்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் விமர்சனம் செய்தார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது :

தமிழகத்தில் கடந்த 15 நாள்களுக்குள் பல்வேறு கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், கொள்ளைகள் என அனைத்து வகையான குற்றங்களும் அதிகரித்துவிட்டன. ஆறு வயது குழந்தையிலிருந்து 60 வயது முதியவர்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற தொடர் குற்றச்செயல்கள் அதிகரிப்பு சமூகத்தின் ஒழுக்க சீர்கேட்டிற்கு காரணமாகிறது. குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் மதுபோதையில் உள்ளது கவலைக்குரியது என்றார். இதைத் தடுப்பதற்கு அரசுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் பொறுப்புள்ளது.

மேலும், சாதி அரசியலாக மாறினால் சமத்துவம் அழியும், மதம் அரசியலாக மாறினால் மனிதம் அழியும், பணம் அரசியலாக மாறினால் பண்பாடு மற்றும் ஒழுக்கம் அழியும். நல்ல ஒழுக்கம் மற்றும் அறநெறி கொண்ட சமூகத்தை உருவாக்க அனைவரும் உறுதி எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

விஜய்க்கு சிபிஐ சம்மன் குறித்து கேள்விக்கு பதிலளிக்க மறுத்த சீமான், சசிகலா புதிய கட்சி தொடங்கியுள்ளதை வரவேற்றவர், அரசியலில் மாற்றம் வரவேண்டும் என்ற நோக்கத்தில்தான் அனைவரும் கட்சி தொடங்குகிறார்கள் என்றும், அவர் மாற்றத்தை கொண்டு வர வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

திமுக தனியார் மயத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து விமர்சித்த சீமான், நாட்டின் பொருளாதார கொள்கையே தனியார் மயத்தை ஏற்றுக்கொண்டது என்றும், கல்வி, மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகள் ஏற்கனவே தனியார் மயமாகிவிட்டன என்றும் கூறினார்.

கூட்டணி குறித்து கேட்கப்பட்டபோது, இன்னும் எந்த கூட்டணியும் முடிவாகவில்லை, தங்கள் கட்சி முன்கூட்டியே மக்களிடம் சென்று அரசியல் நிலைப்பாடுகளை விளக்கி வருவதாகவும், பெரிய பொருளாதார ஆதாரம் இல்லாததால் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு பெற முயற்சித்து வருவகிறோம். தமிழர் நலனுக்காக நடத்தப்படும் போராட்டங்கள் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்றும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலக அரசியல் குறித்து கூறுகையில், ஈரான் - இஸ்ரேல் போர் போன்ற சர்வதேச மோதல்களில் பல நாடுகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும், போர் எப்போதும் மனித உயிர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில், தமிழக அரசியல் போட்டி குறித்து பேசும்போது, நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் அரசியல் மக்களுக்கு தேவையா? இல்லையா? என்பதே முக்கியம் என்றும், மற்றவர்கள் அரசியலுக்கு வருவது தங்கள் கட்சியை பாதிக்காது என்றும் அவர் கூறினார்.

கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை வசதி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய அடிப்படை தேவைகள் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே தங்கள் அரசியல் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுக, திமுக போட்டி போட்டுக் கொண்டு பணம் வழங்குவது குறித்த கேள்விக்கு, நானும் உங்களுக்கு ரூ.5000 தருவேன் என கலகலப்பாக கூறிவிட்டு சென்றார்.

summary

There is no security for people from 6-year-old children to 60-year-olds under DMK rule: Seeman criticizes

முழு கட்டுரையைப் படிக்க →