மூத்த தலைவர்களிடம் மனிதாபிமானம் இல்லாதவர் நிதீஷ்குமார்
'நிதீஷ்குமார் பிரதமர் பதவியை வகிக்கும் தகுதி உடையவர் என்று நான் ஒரு காலத்தில் கருதினேன். எனினும், வயது முதிர்ந்தவர்களிடம் (மூத்த தலைவர்களிடம்) அவர் மனிதாபிமானம் காட்ட மாட்டார்
'நிதீஷ்குமார் பிரதமர் பதவியை வகிக்கும் தகுதி உடையவர் என்று நான் ஒரு காலத்தில் கருதினேன். எனினும், வயது முதிர்ந்தவர்களிடம் (மூத்த தலைவர்களிடம்) அவர் மனிதாபிமானம் காட்ட மாட்டார் என்பதால் அவரை என்னால் மன்னிக்க முடியாது' என்று சமதா கட்சியின் முன்னாள் தலைவரான ஜெயா ஜேட்லி குறைகூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கடந்த 1994-இல் உருவாக்கிய சமதா கட்சியில் தற்போதைய பிகார் முதல்வர் நிதீஷ்குமார், ஜெயா ஜேட்லி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். அப்போது அக்கட்சியின் தலைவராக ஜெயா ஜேட்லி இருந்தார். அதன் பின் அக்கட்சி, ஐக்கிய ஜனதா தளத்துடன் கடந்த 2003-இல் இணைந்தது.
இந்நிலையில், அவர் தனது அரசியல் அனுபவங்களைத் தொகுத்து 'லைஃப் அமங்க் தி ஸ்கார்ப்பியன்ஸ்' என்ற பெயரில் ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். தில்லியில் நடைபெற்ற இந்தப் புத்தகக வெளியீட்டு விழாவில் ஜெயா ஜேட்லி பேசியதாவது:
நிதீஷ்குமார் பிரதமராவதற்கான தகுதி படைத்தவர் என்று ஒரு காலத்தில் நான் கருதினேன். அப்போது அவர் நல்ல பயிற்சியைப் பெற்றவராகவும், நிர்வாக ரீதியில் திறமை வாய்ந்தவராகவும் இருந்தார். ஆனால், அவருடன் இணைந்து பணியாற்றிய நேரத்தில் அவரது அணுகுமுறை எனக்கு அதிருப்தியளித்தது. ஜனநாயகப் பண்பு என்ற ரீதியிலும், ஒரு குழுவாகப் பணியாற்றுவதிலும் நிதீஷ்குமாரின் அணுகுமுறை சரியாக அமைந்திருக்கவில்லை.
எனினும், என்னால் அவரை மன்னிக்கவே முடியாத விஷயம் என்னவென்றால் வயது முதிர்ந்தவர்களிடம், குறிப்பாக தனது அரசியல் வழிகாட்டியான ஃபெர்னாண்டஸிடம் அவர் மனிதாபிமானம் காட்டவில்லை என்பதுதான்.
கடந்த 2009-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பிகாரில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடுவதற்கு மிகவும் சிறந்த அரசியல் தலைவரான ஃபெர்னாண்டஸுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அப்போது அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், பெர்னாண்டஸ், பிகாரின் முசாஃபர்பூர் தொகுதியில் இருந்து சுயேச்சையாகப் போட்டியிட்டார். இதனால் அவர் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார்.
முன்னதாக, வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநராக ஜக்மோகன் கடந்த 1990-இல் நியமிக்கப்பட்டார். அதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, நானும், ஃபெர்னாஸ்டஸும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில், ஃபரூக் அப்துல்லா, பெர்னாண்டஸுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து, ஜக்மோகனை ஆளுநராக நியமித்தால் தாம் தேசிய முன்னணியில் இஇருந்து விலகி விடுவதாகத் தெரிவித்தார்.
ஃபெர்னாண்டஸ் உடனடியாக வி.பி.சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அதற்கு, ஜக்மோகனை காஷ்மீர் ஆளுநராக நியமிக்க மாட்டோம் என்று வி.பி.சிங் உறுதியளித்தார். எனினும், ஜக்மோகன் அந்த மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட தகவலை அறிந்து ஃபெர்னாண்டஸ் அதிர்ச்சியடைந்தார்.
காஷ்மீருக்கு சிறப்புப் பொறுப்பாளராக ஃபெர்னாண்டஸை நியமிக்குமாறு அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜீவ் காந்தி, வி.பி.சிங்கிடம் தெரிவித்தார். எனினும், துரதிருஷ்டவசமாக, தாம் காஷ்மீருக்கு வரப்போவதாக அந்த மாநில ஆளுநர் மாளிகைக்கு ஃபெர்னாண்டஸ் எப்போது தொலைபேசியில் கூறினாலும் அதற்கு யாரும் பதிலளிக்கவில்லை என்று ஜெயா ஜேட்லி தெரிவித்தார்.