பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மாவட்டத்தில் எல்லைப் பகுதி வழியாக ஊருடுவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவரை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து பிஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேரா பாபா நானக் பகுதியில் சர்வதேச எல்லையில் வேலியைத் தாண்டி இந்திய எல்லைக்குள் பெண் ஒருவர் புதன்கிழமை இரவு ஊடுருவ முயன்றதை அந்தப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எஃப் வீரர்கள் கண்டனர். அதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை சரணடையுமாறு வீரர்கள் எச்சரித்தனர். எனினும், எச்சரிக்கையை புறக்கணித்துவிட்டு அவர் தொடர்ந்து முன்னேறினார். இதையடுத்து, வீரர்கள் அந்தப் பெண்ணை துப்பாக்கியால் சுட்டனர். இதில், அவர் உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் உடலை வாங்க பாகிஸ்தான் ராணுவத்தினர் மறுத்துவிட்டனர். இதையடுத்து, தேரா பாபா நானக் காவல் நிலையத்தில் அந்தப் பெண்ணின் சடலம் இறுதிச் சடங்கு செய்வதற்காக ஒப்படைக்கப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.