ஹைதராபாத்: ஹைதரபாத்தைச் சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, சமூக வலைத்தள ஸ்டேடசில் தற்கொலை பற்றிய நெஞ்சை உருக்கும் தகவலை பதிவு செய்துள்ளார்.
ஹைதராபாத்தில் துண்டிக்கல் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சுராராம் காலனியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் கே. சாய் துர்கா மௌனிகா. இவர் பி.டெக் இறுதியாண்டு படித்து வந்தார். இவர் கடந்த புதன்கிழமை, தனது வீட்டில் இருந்த மின்விசியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை குறித்து விசாரித்து வந்த காவல்துறையினருக்கு, அவர், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் புரொஃபைலில் "எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் மிக மோசமாகிக் கொண்டே போகிறது. ஒவ்வொன்றையும் கடந்து சென்று கொண்டிருக்கிறேன். எனது மோசமான வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தில் இருந்தும் பாடம் கற்றுக் கொண்டே வருகிறேன். விரைவில் இதில் இருந்து வெளியேறிவிடுவேன் என்று நம்புகிறேன்" என பதிவு செய்துள்ளார்.
சம்பவத்தன்று, ஒழுங்காகப் படிக்காததால், மௌனிகாவுக்கும், அவரது தாய்க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீட்டுக்கு வந்த பெற்றோர் மௌனிகா தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர்.
தற்கொலை குறித்து எந்த கடிதமும் அவர் எழுதி வைக்கவில்லை. மர்ம மரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.