ஜம்மு-காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் எம்எல்ஏ முஸ்தக் அகமது ஷாவின் வீட்டின் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டை வெள்ளிக்கிழமை வீசினர்.
முஸ்தக் அகமது ஷாவின் வீடு, புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் அமைந்துள்ளது. இந்த வீட்டின் மீது பயங்கரவாதிகள், வெள்ளிக்கிழமை மதியம் கையெறி குண்டை வீசினர். அந்த வெடிகுண்டு, வீட்டின் மதில் சுவர் மீது விழுந்து வெடித்தது. எனினும், சுவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
காஷ்மீரில் அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது, இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு, சோபியான் மாவட்டம், வாச்சி கிராமத்தில் உள்ள பிடிபி எம்எல்ஏ ஐஜாஸ் அகமது மீரின் வீட்டின் மீது, பயங்கரவாதிகள் வியாழக்கிழமை கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.