ஜார்க்கண்டில் ரேஷனில் உணவு தானியங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
ஜார்க்கண்டில் ரேஷனில் ஆதாரை பதிவு செய்யாத காரணத்துக்காக ஒரு குடும்பத்துக்கு பொருட்கள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பட்டினியால் வாடிய அந்த குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த மாதம் 28-ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், ஜாம்ஷெட்பூரில் அந்த மாநில உணவு விநியோகத்துறை அமைச்சர் சரயூ ராய் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசியதாவது:
ஆதார் அட்டை கட்டாயமில்லை. உணவு தானியங்களை பெறுவதற்கு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை அல்லது வேறு ஏதேனும் அடையாள அட்டையை பயன்படுத்தலாம். ரேஷன் பொருட்கள் விநியோகம் தொடர்பாக ஏதேனும் புகார்களை இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்பு
கொண்டு மக்கள் தெரிவிக்கலாம் என்றார் அவர்.
இதனிடையே, சிறுமியின் உயிரிழப்புத் தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 6-ஆம் தேதி அமைக்கப்பட்ட 3 பேரைக் கொண்ட குழு, அந்த சிறுமிக்கு மலேரியா பாதிப்பு இருப்பதாக அறிக்கை அளித்தது. இதை முதல்வர் ரகுவர்தாஸ் ஏற்கவில்லை. சிறுமியின் உயிரிழப்பு குறித்து புதிதாக விசாரணை நடத்தும்படி முதல்வர் ரகுவர் தாஸ் கடந்த 17-ஆம் தேதி உத்தரவிட்டார்.