முகப்பு
இந்தியா

நிலத்தை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு ஹோட்டல் காண்ட்ராக்ட்: லாலு, அவர் மகனுக்கு சிபிஐ சம்மன்! 

Updated On : 7 செப்டம்பர், 2017 at 1:22 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:20 PM

புதுதில்லி: ரயில்வேக்கு சொந்தமான இரு ஹோட்டல்களின் பராமரிப்பினை, நிலத்தினை லஞ்சமாக பெற்றுக் கொண்டு தனியார் நிறுவனமொன்றுக்கு அளித்த குற்றச்சாட்டில், முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகன் தேஜஸ்விக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது 

பிகார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சராக பணியாற்றினார். அப்பொழுது ரயில்வேக்கு சொந்தமான பி.என்.ஆர் புரி மற்றும் பி.என்.ஆர் ராஞ்சி ஆகிய இரு ஹோட்டல்களின் பராமரிப்பு பணியானது சுஜாதா ஹோட்டல் என்ற தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது.

தற்பொழுது லாலு பிரசாத் யாதவ் குறிப்பிட்ட சுஜாதா ஹோட்டல் தனியார் நிறுவனத்திடம் இருந்து, தனது மகனுக்கு சொந்தமான பினாமி நிறுவனம் ஒன்றின் மூலமாக, அதிக மதிப்புடைய மூன்று ஏக்கர்  நிலத்தினை லஞ்சமாக பெற்றுக் கொண்டுதான் அந்த பராமரிப்பு ஒப்பந்தத்தினை அளித்தார் என்று குற்றசாட்டு எழுந்துள்ளது.

Advertisement

இதன் காரணமாக அதிகாரத்தினை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ், மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி,  முன்னாள் மத்திய அமைச்சர் பிரேம் சந்த் குப்தாவின் மனைவி சரளா ஆகியோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறிப்பிட்ட சுஜாதா ஹோட்டல் நிறுவனத்தின் இயக்குனர்கள் விஜய் கோச்சார் மற்றும் வினய் கோச்சார் மற்றும் பினாமி நிறுவனமாக செயல்பட்ட 'டிலைட்' நிறுவன இயக்குனர் கோயல் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

விசாரணைக்காக தில்லி சிபிஐ தலைமையகத்தில் லாலு பிரசாத் யாதவ் வரும் 11-ஆம் தேதியும், அவரது மகன் தேஜஸ்வி அதற்கு அடுத்த நாளான 12-ஆம் தேதியும், ஆஜராக வேண்டுமென்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.