நீங்கள் முறையிட வேண்டியது ஊடகமல்ல உயர் நீதிமன்றம்: லாலு மீது நிதீஷ் தாக்கு
ஊழல் விவகாரம் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் ஊடகத்திடம் பேட்டியளிப்பதை தவிர்த்துவிட்டு நீதிமன்றத்தை நாட வேண்டும் என நிதீஷ் குமார் தெரிவித்தார்.
தன் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊடகங்களிடம் விளக்கமளிப்பதை விடுத்து நீதிமன்றத்தை நாட வேண்டும் என லாலு பிரசாத் யாதவ் மீது பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கடுமையாகச் சாடினார்.
ஆகஸ்ட் 26-ந் தேதி என்ஜிஓ அமைப்பான ஸ்ரீஜனில் 2005-2013 காலகட்டத்தில் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்தது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
அதுமட்டுமல்லாமல் ரயில்வே கேன்டீன் ஊழல் வழக்கு தொடர்பாக லாலு மகன் தேஜஸ்வி மீதும் சிபிஐ விசாரித்து வருகிறது.
பீகார் மக்களை நிதீஷ் குமார் மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டார். ஜனநாயகத்தை படுகொலை செய்து விட்டர். இந்த சிபிஐ வழக்குகளில் உண்மையில்லை.
இதில் நிதீஷுக்கு தான் தொடர்பு உள்ளது. அதற்கான ஆவணங்களை அவர் அழித்து விட்டார் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பேட்டியளித்தார்.
இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை ஊடகங்களிடம் விளக்கம் அளிப்பதை விடுத்து தக்க ஆதாரங்களுடன் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை நாடி உண்மையை நீருபிக்க வேண்டும் என லாலு பிரசாத் யாதவுக்கு பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பதிலடி கொடுத்துள்ளார்.