தமிழகத்தில் தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்யும் விவகாரத்தில், பேரவைத் தலைவர் ப.தனபாலும், ஆளுநர் வித்யாசாகர் ராவும் காலம் தாழ்த்தியது ஏன்? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மற்றொரு கட்சியைப் பற்றி கருத்து தெரிவிப்பதில் காங்கிரஸ் கட்சி மிகவும் கவனமாக உள்ளது. எனினும், அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்யும் விவகாரத்தில் ஆளுநரும், பேரவைத் தலைவரும் மிகவும் காலம் தாழ்த்தியுள்ளனர். இதில் உள்நோக்கம் இருந்ததா என தெரிய வேண்டும். எனவே, எம்எல்ஏக்களின் தகுதிநீக்க விவகாரம், நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்றார் அவர்.