புதுதில்லி: உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையியீட்டு வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஆனால் இந்த இறுதித் தீர்ப்பில் உடன்பாடு இல்லாத காரணத்தால் வழக்கில் தொடர்புடைய மாநிலங்களான தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த ஜூலை 11-ஆம் துவங்கி தில்லி உச்ச நீதிமன்றத்தில் தினமும் நடைபெற்று வந்தது. இதில் சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களும் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தினை எடுத்து வைத்தன.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தேதி குறிப்பிடாமல் உச்ச நீதின்றத்தால் தற்பொழுது தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.