ஆலப்புழா: கேரளா மாநிலப் போக்குவரதுத் துறை அமைச்சரின் நில அபகரிப்பு ஊழலை அம்பலப்படுத்திய தொலைக்காட்சி சேனல் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கேரளாவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி சேனல் ஏசியா நெட். இந்த சேனலில் அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் தாமஸ் சாண்டி, அவர் நடத்தி வரும் விடுதி ஒன்றில் செய்து வரும் நில அபகரிப்பு ஊழல் தொடர்பாக தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அந்த தொலைக்காட்சியின் செய்தியாளர் பிரசாத் என்பவர் இந்த தொடர் செய்திகளை வெளியிட்டவராவார்.
அந்த செய்திகளில் அமைச்சர் தாமஸ் சாண்டி தனது பண பலம், அதிகாரம் ஆகியவற்றின் மூலமாக இத்தகைய தவறுகளில் இருந்து சிக்காமல் தப்பித்து வந்தார் என்பது குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால் அமைச்சரோ தான் இதில் எந்த வித தவறும் செய்யவில்லை என்று தொடர்ந்து கூறி வந்தார். மேலும் சட்டப்பேரவையிலேயே ஒரு முறை தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தான் உடனேயே தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாகவும் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள ஏசியா நெட் தொலைக்காட்சியின் கிளை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்திய நபர்களின் உருவங்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த தாக்குதலை மாநில எதிர்கட்சித் தலைவரான காங்கிரஸின் ரமேஷ் சென்னிதாலா உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கேரளா மாநில காவல்துறைத் தலைவர் லோக்நாத் பெஹ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில் குற்றவாளிகளைப் பிடிக்க ஐ.ஜி தலைமையில் விரைவில் தனிப்படை அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.