மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில்தான் தங்கியிருக்கிறார் என்று அவரது சகோதரர் இக்பால் காஸ்கர் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
கட்டுமான அதிபரை மிரட்டிப் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், தாணே போலீஸார் சில நாள்களுக்கு முன்பு, தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் காஸ்கரை கைது செய்தனர். அவரிடம், உளவுத் துறை அதிகாரிகளும், தாணே குற்றப் பிரிவு போலீஸாரும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்போது அவர் போலீஸாரிடம் தெரிவித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி தாவூத் இப்ராஹிம் இப்போதும் பாகிஸ்தானில்தான் தங்கியுள்ளார். மும்பையில் உள்ள தனது உறவினர்கள், கூட்டாளிகளுடன் முன்பு தாவூத் அடிக்கடி பேசிவந்தார். இப்போது, அவரது தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாக எழுந்துள்ள அச்சத்தை அடுத்து அவர் தொலைபேசியில் தொடர்பு கொள்வதைக் குறைத்துவிட்டார்.
அதே நேரத்தில் தாவூத்துடன் தங்கியுள்ள தனது மற்றொரு சகோதரர் அனீஸ் இப்ராஹிமிடம் சமீபகாலத்தில் ஒருசில முறை பேசியுள்ளதாக காஸ்கர் ஒப்புக் கொண்டுள்ளார்.
தாவூத் பாகிஸ்தானில் இருந்தபடி ஆப்பிரிக்க நாடுகளில் போதைப்பொருள் கடத்தல் தொழிலை நடத்தி வருகிறார். விசாரணையில் காஸ்கர் கொடுத்த தகவல்கள், மும்பையில் செயல்பட்டு வரும் தாவூத்தின் கூட்டாளிகள் மீதான குற்ற வழக்கு விசாரணைக்கு உதவிகரமாக இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.