முகப்பு
இந்தியா

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: பிரதமர் இல்லம் அருகே போராட முயன்ற தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்கள் கைது! 

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஞாயிறன்று பிரதமர் மோடியின் இல்லம் அருகே போராட முயன்ற தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:41 PM
பகிர்:

புதுதில்லி: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஞாயிறன்று பிரதமர் மோடியின் இல்லம் அருகே போராட முயன்ற தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், அதனை மத்திய அரசு ஏற்காத நிலையில் மத்திய அமைச்சரவையில் இருந்து அக்கட்சியின் மந்திரிகள் பதவி விலகினர்.

இதற்கு எதிர்வினையாக ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சியின் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்த பாரதீய ஜனதா கட்சி மந்திரிகளும் பதவி விலகினர். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த விவகாரம் கடுமையாக எதிரொலித்தது.  நாடாளுமன்றத்திற்கு வெளியே அக்கட்சியின் எம்.பி.க்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு  வந்தனர்.

இந்நிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஞாயிறன்று பிரதமர் மோடியின் இல்லம் அருகே போராட முயன்ற தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரான ஒய்.எஸ். சவுத்ரியின் இல்லத்தில் ஞாயிறு காலை அக்கட்சியின் எம்.பி.க்கள் ஒன்றாக கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.  இதில் அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுப்பது பற்றி விவாதித்து, பிரதமர் இல்லம் அருகே போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. 

அதன்படி தில்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் அமைந்துள்ள பிரதமர் இல்லம் நோக்கி சென்று போராட்டம் நடத்த புறப்பட்டனர்.  அவர்களை, தில்லி போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.