ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டி திருமலையில் தாடியை சமர்ப்பித்த இயக்குனர்
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க அருள்புரியுமாறு வேண்டி பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் கே.ராகவேந்திர ராவ் திருப்பதி ஏழுமலையானுக்கு தனது தாடியைச் சமர்ப்பித்தார்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க அருள்புரியுமாறு வேண்டி பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் கே.ராகவேந்திர ராவ் திருப்பதி ஏழுமலையானுக்கு தனது தாடியைச் சமர்ப்பித்தார்.
தெலுங்குத் திரை உலகின் மூத்த இயக்குராகப் போற்றப்படுவர் கே.ராகவேந்திரராவ். 'அன்னமய்யா' உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை அவர் இயக்கியுள்ளார். அவர் இயக்கிய படங்களைப் போல் அவரது தாடியும் மக்களிடையே பிரபலம். அவர் கடந்த முறை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராகச் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், ராகவேந்திர ராவ், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க அருள் புரியுமாறு வேண்டி திருப்பதி ஏழுமலையானுக்கு தனது தாடியைச் சமர்ப்பித்தார். அதன் பின் ஏழுமலையானை தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோயிலுக்கு வெளியே அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆந்திரம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களில் தெலுங்குத் திரையுலகம் பங்கேற்கும். அதே போல், ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் அனைத்திலும் தெலுங்கு திரைத்துறையும் மக்களுடன் இணைந்து போராடி வருகிறது.
நான் பல்லாண்டுகளாக வைத்திருந்த தாடியை, சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டுதலுக்காக ஏழுமலையானுக்கு சமர்ப்பித்துள்ளேன். மற்ற விவரங்களை தேவஸ்தான அறங்காவலர் குழு அமைக்கப்பட்ட பிறகு, ஏழுமலையானை தரிசிக்க வரும் போது கூறுகிறேன் என்றார் ராகவேந்திர ராவ்.
தேவஸ்தான அறங்காவலர் குழுவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு (2017) பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெற்றது. அதன் பின் பல்வேறு காரணங்களால் ஆந்திர அரசு புதிய அறங்காவலர் குழுவை அமைப்பதை தாமதப்படுத்தியது. பல முறை திருமலைக்கு வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போதும் அவர் அதற்கு பதிலளிக்கவில்லை.
இந்தச் சூழலில், இயக்குநர் ராகவேந்திர ராவ் திருமலையில் அளித்த பேட்டியின் மூலம் தேவஸ்தான அறங்காவலர் குழு விரைவில் அமைக்கப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.