மேற்கு வங்கம்: சூறைக்காற்றால் நேரிட்ட விபத்துகளில் 18 பேர் பலி
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சூறைக் காற்றால் நேரிட்ட விபத்துகளில் 18 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சூறைக் காற்றால் நேரிட்ட விபத்துகளில் 18 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.
கொல்கத்தா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதகிளில் செவ்வாய்க்கிழமை இரவு 7.42 மணிக்கு வடமேற்கு பருவக் காற்று பலமாக வீசத் தொடங்கியது. மணிக்கு 98 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றினால், கொல்கத்தாவில் 26 இடங்களில் 500-க்கும் அதிமான மரங்கள் வேரோடு சாய்ந்தன.
நகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு 7.50 மணியில் இருந்து மெட்ரோ ரயில் சேவை 2 மணி நேரத்துக்கு பாதிக்கப்பட்டது. புறநகர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. விமானங்கள் வந்து செல்வதும் தாமதமாகின.
காற்று பலமாக வீசியதால் நேரிட்ட விபத்துகளில் 18 பேர் உயிரிழந்தனர். கொல்கத்தாவில் 7 பேரும், ஹெளரா மாவட்டத்தில் 6 பேரும், பங்குரா, ஹூக்ளி மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர்.
வாகனங்களில் செல்லும்போது மரங்கள் முறிந்து விழுந்ததாலும், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து மின்சாரம் தாக்கியதாலும், சுவர் இடிந்து விழுந்ததாலும், இந்த விபத்துகள் நேரிட்டதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர்.
இதனிடையே, இந்த பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தி, உடனடியாக அறிக்கை அளிக்குமாறு தலைமைச் செயலருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு பேரிடர் மேலாண்மைத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலக அதிகாரி ஒருவர் கூறினார்.