புது தில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பலாத்காரத்துக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு தில்லி உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
கதுவா சம்பவம் தொடர்பான வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கதுவா சம்பவத்தில் தொடர்புடைய சிறுமியின் பெயரையும், புகைப்படத்தையும் வெளியிட்ட ஊடகங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், அடையாளத்தை வெளிப்படுத்திய ஊடகங்கள் மன்னிப்புக் கேட்கும்படி உத்தரவிட்டனர்.
அதோடு, சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்திய ஊடகங்கள் ஒவ்வொன்றும் தலா ரூ.10 லட்சத்தை ஜம்மு காஷ்மீர் நிவாரண நிதியில் சேர்ப்பிக்குமாறு அபராதமும் விதித்துள்ளது.
பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற சட்டம் தெரிந்தும், தங்களது அறியாமையால் சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டதாக ஊடகங்கள் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரின.
பின்னர், பாலியல் பலாத்கார சம்பவங்களில் பாதிக்கப்படுவோரின் அடையாளத்தை வெளிப்படுத்துவது அரசியலமைப்புச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதையும், மீறினால் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பது குறித்து ஊடகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி அறிவுரை அளித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல், பொருள் உணர்த்தும் பெயரால் குறிப்பிடலாம் என்றும் ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.