தேர்தலுக்காக கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் சேவையை நாங்கள் பயன்படுத்தவில்லை, அவர்களுடன் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம், முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவனத்திடம் இருந்து அதன் பயன்பாட்டாளர்களின் தகவல்களைப் பெற்று, அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாக பிரசாரத்துக்கு பயன்படுத்தியது அண்மையில் தெரியவந்தது.
இதேபோல, அடுத்த மக்களவைத் தேர்தலுக்காக முகநூல் மூலம் அதனைப் பயன்படுத்துபவர்கள் மத்தியில் காங்கிரஸுக்கு ஆதரவான நிலைப்பாட்டை உருவாக்க கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் சேவையை அக்கட்சி பெற்றுள்ளதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் தங்கள் சேவையை அளிக்க கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் காங்கிரஸ் கட்சியிடம் கொடுத்ததாக 49 பக்க செயல் திட்ட அறிக்கை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், இந்த சேவைக்காக ரூ.2.5 கோடியை கட்டணமாக அந்த நிறுவனம் நிர்ணயித்துள்ளது என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த அறிக்கை அளிக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு புதன்கிழமை ú பட்டியளித்த காங்கிரஸ் கட்சியில் தகவல் ஆய்வுப் பிரிவுத் தலைவர் பிரவீண் சக்கரவர்த்தி இது தொடர்பாக கூறியதாவது:
காங்கிரஸ் மிகப்பெரிய கட்சி. தேர்தல் நேரத்தில் இதுபோன்று பல நிறுவனங்கள் கட்சியை அணுகுவது வழக்கமானதுதான். கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் சேவையை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தவில்லை. அவர்களிடம் இருந்த எந்த செயல் திட்டத்தையும் பெறவுமில்லை. இப்போது பரவி வரும் செயல்திட்ட அறிக்கை ஆவணத்தை நான் பார்த்தது இல்லை. இந்த விஷயத்தில், காங்கிரஸ் கட்சியிடம் மறைப்பதற்கு என்று எதுமில்லை என்றார் அவர்.
ஏற்கெனவே, அமெரிக்க தேர்தலில் தலையிட்ட குற்றச்சாட்டில், கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அலெக்சாண்டர் நிக்ஸ் விசாரணையை எதிர்கொண்டுள்ளார். முகநூல் நிறுவனத்துடன் இணைந்து அவர் செய்த இந்த முறைகேடு வெளியானதை அடுத்து கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.