அமெரிக்காவில் ஹெச்.1-பி நுழைவு இசைவு (விசா) சலுகை பெற்றவர்களின் வாழ்க்கை துணைவர்களும் (கணவன் அல்லது மனைவி) அங்கு பணிபுரியும் வகையில் வழங்கப்படும் ஹெச்-4 நுழைவு இசைவு சலுகை ரத்து செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
முந்தைய ஒபாமா அரசு அளித்த இந்த சிறப்பு சலுகையை தற்போதைய டிரம்ப் அரசு ரத்து செய்ய திட்டமிட்டிருப்பதால் இந்தியர்கள் பெருமளவில் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்தியர்கள் ஹெச்.1-பி நுழைவு இசைவு பெற்று பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் தங்களது வாழ்க்கை துணைவர்களுக்கு ஹெச்-4 நுழைவு இசைவு பெற்று பயனடைந்து வருகின்றனர்.
சிறப்பு சலுகையான ஹெச்-4 நுழைவு இசைவை பயன்படுத்தி அமெரிக்காவில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை 71,000-ஐ தாண்டும். இதில், 90 சதவீதம் பயனாளர்கள் இந்தியர்கள் ஆவர். குறிப்பாக, இந்திய பயனாளர்களில் 93 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையிலேயே ஹெச்-4 நுழைவு இசைவு முறை ரத்து செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஹெச்-4 நுழைவு இசைவை ரத்து செய்யும் அறிவிப்பை கோடை இறுதியில் எதிர்பார்க்கலாம் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைத் துறையின் இயக்குநர் பிரான்சிஸ் சிஸ்னா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
புதிய விதிகளை அறிமுகம் செய்யவும், புதிய வழிகாட்டுதல்களை வெளியிடவும், பழைய விதிகளை திருத்தம் செய்யவும், குடியேற்ற அமைப்பின் நிர்வாகத்தில் அமெரிக்க பணியாளர்களின் நலன்களை காக்கவும் இந்த நடவடிக்கை அவசியமாகிறது.
விதிமுறைகளை மாற்றியமைப்பது தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்றார் அவர்.