புதுதில்லி: எஸ்சி,எஸ்டி வன்கொடுமைச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை மறுஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணையை, உச்ச நீதிமன்றம் மே 3-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
எஸ்சி,எஸ்டி வன்கொடுமைச் சட்டப் பிரிவுகள் தொடர்பான வழக்கொன்றில் கடந்த மார்ச் 20-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல், உதய் உமேஷ் லலித் ஆகியோர் அடங்கிய தீர்ப்பு வழங்கிய தீர்ப்ப்பானது எஸ்சி,எஸ்டி சட்டப் பிரிவுகளை நீர்த்துப் போகச்செய்யும் படி இருப்பதாக பரவலாக கண்டனங்கள் எழுந்தது.
அதன் தொடர்ச்சியாக வடமாநிலங்களில் ஏப்ரல் 3-ம் தேதி தலித் அமைப்புகள் சார்பில் பாரத் பந்த் நடத்தப்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பின்னர் இந்த சட்டத்தை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சிகள் தரப்பில் நாடாளுமன்றத்திலும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட மத்தியஅரசு சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவைக் கடந்த 3-ம் தேதி விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் இது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் மனுவாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், நீதிபதி உதய் உமேஷ் லலித் தலைமையிலான அமர்வு முன் வெள்ளியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் கேகே. வேணுகோபால், ஏப்ரல் 3-ம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்று இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் தங்களுடைய கருத்தை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்துவிட்டனர் என்று தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.