முகப்பு
இந்தியா

மத்திய அமைச்சர் ராஜென் கோஹைன் மீதான பாலியல் வன்கொடுமை புகார் திரும்ப பெறப்பட்டதால் சர்ச்சை நீடிப்பு

மத்திய அமைச்சர் ராஜென் கோஹன் மீதான பாலியல் வன்கொடுமை புகாரை திரும்ப பெற்றுவிட்டதாக புகார் அளித்த பெண்ணின் கணவர் சனிக்கிழமை தெரிவித்தார்.

Updated On : 11 ஆகஸ்ட், 2018 at 10:44 PM
கோப்புப்படம்
பகிர்:

மத்திய அமைச்சர் ராஜென் கோஹன் மீதான பாலியல் வன்கொடுமை புகாரை திரும்ப பெற்றுவிட்டதாக புகார் அளித்த பெண்ணின் கணவர் சனிக்கிழமை தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி 24 வயதுமிக்க ஒரு பெண் அஸ்ஸாம் மாநிலம் நாகௌன் சதார் காவல் நிலையத்தில், ரயில்வே இணை அமைச்சர் ராஜென் கோஹைன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இதையடுத்து, இந்திய தண்டனையியல் சட்டம் 417, 376 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

"அந்த பெண் அளித்த புகாரில், பாதிக்கப்பட்டவர்களாக அவரையும், அவரது சகோதரியையும் இணைத்துள்ளார். அவரது சகோதரிக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக  கூறி 7, 8 மாதங்களாக அவர்கள் 2 பேரும் பாலியல் ரீதியாக பயன்படுத்தப்பட்டுள்ளனர். அமைச்சர் கோஹைனுக்கும், அந்த பெண்ணுக்கும் நீண்ட நாட்களாகவே தொடர்பு இருந்திருக்கிறது" என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.   

Advertisement

அதேசமயம், அந்த பெண் புகார் அளித்த அதே தினத்தில் அமைச்சர் ராஜென் கோஹைனும், இந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் புகாரை அளித்துள்ளார். இதற்கிடையில், அமைச்சர் கோஹன் புகார் கொடுத்த பெண்ணுடைய கணவரை இழிவாக பேசுவது போல் ஒரு ஆடியோ பதிவு வெளியானதாக கூறப்படுகிறது.  

இந்நிலையில், அந்த பெண் அளித்த புகார் கடந்த 6-ஆம் தேதியே திரும்பப் பெறப்பட்டது என்று புகார் அளித்த பெண்ணின் கணவர் சனிக்கிழமை தெரிவித்தார். அதனால், இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் அவர் ஊடகங்களை கேட்டுக்கொண்டார். 

ஆனால், நாகௌன் போலீஸார் தரப்பில், "ஏற்கனவே வழக்குப்பதிவாகி நீதிமன்றத்தையும் சென்றடைந்துவிட்டது. அதனால் இந்த வழக்கு சட்டப்படியே நடைபெறும்" என்று கூறப்படுகிறது. 

நாகௌன் காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ராய் மேதி, இந்த வழக்கை திரும்பப் பெறுவதாக அந்த பெண் அளித்த மனுவின் ரசீது மூலம் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், இந்த வழக்கு ஏற்கனவே பதியப்பட்டு, மனுதாரரின் வாக்குமூலமும் பெற்றுவிட்டதால் போலீஸார் விசாரணையை மேற்கொள்வார்கள் என்று காவல் கண்காணிப்பாளர் மேதி தெரிவித்தார்.  

இதனால், ரயில்வே அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும், இந்த வழக்கில் உயர்மட்ட விசாரணையை நடத்த வேண்டும் எனவும் அஸ்ஸாம் மாநில காங்கிரஸார் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.