முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக புதன்கிழமை காலை அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் 13 மதகுகளும் திறக்கப்பட்டு, இடுக்கி அணைக்கு 10,800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
மேலும், தமிழக பகுதிக்கு தலைமதகில் 4 குழாய்கள் வழியாக 2200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் அருகே உள்ள வல்லக்கடவு, சப்பாத்து, உப்புத்துறை பகுதிகளில் பெரியாற்றின் கரையோரம் வாழும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய துணைக் குழு ஆய்வு: முல்லைப் பெரியாறு அணையில் தற்போது நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. இதனால், அணையில் ஏற்படும் மாற்றங்களை பார்வையிடவும், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் மத்திய துணை கண்காணிப்புக் குழுவினர் புதன்கிழமை அணைப் பகுதியை பார்வையிட்டதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு புதன்கிழமை கடிதம் எழுதினார்.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதால் அணையின் நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை கடிதம் மூலம் பதிலளித்துள்ளார். மேலும், நீர்ப்பிடிப்பு இடங்களில் மழையை அளக்க தமிழக அதிகாரிகளை கேரளா அனுமதிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியில் இருந்து குறைக்க கோரும் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கேரளாவின் இடுக்கியைச் சேர்ந்த ரசூல் ராயின் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்க உள்ளனர்.