முசாஃபர்பூர் சிறுமிகள் பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மஞ்சு வெர்மா இல்லம் உட்பட பிகார் முழுவதும் 12 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
முசாஃபர்பூர் சிறுமிகள் பாலியல் வழக்கு தொடர்பாக பாட்னாவில் இருக்கும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரஜேஷின் ஹிந்தி செய்தித்தாள் அலுவலகம், முசாஃபர்பூரில் இருக்கும் அவரது விடுதி மற்றும் அவரது சொந்த கிராமத்தில் இருக்கும் இல்லம் என 12 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர்.
குறிப்பாக பிகார் மாநில முன்னாள் அமைச்சர் மஞ்சு வெர்மாவின் பாட்னா மற்றும் பெகுசாராய் இல்லங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இதுதொடர்பாக காவல் துறை சார்பில் ஒரு அதிகாரி தெரிவிக்கையில், "முன்னாள் அமைச்சர் மஞ்சு வெர்மா மற்றும் அவரது கணவர் சந்தேஷ்வர் வெர்மா ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அமைச்சர் மஞ்சு வெர்மா இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மஞ்சு வெர்மாவின் உதவியாளரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்" என்றார்.
இந்த சோதனை மற்றும் விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் ஏராளமான ஆதாரங்களை திரட்டியுள்ளதாக நம்பகத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வழக்கு விவரம்:
பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) ஒன்று காப்பகத்தை நடத்தி வந்தது. அங்கிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் அண்மையில் வெளியானது. இதையடுத்து, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக காப்பகத்தை நடத்தி வந்த பிரஜேஷ் தாகூர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், முசாஃபர்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுக்காப்பு அதிகாரி ரவிகுமார் ரௌஷனும் ஒருவர்.
இந்த கைது நடவடிக்கையை அடுத்து ரவிகுமாரின் மனைவி ஷிவ்குமாரி, 'அமைச்சர் மஞ்சுவின் கணவர் சந்தேஷ்வர் காப்பகத்தில் உள்ள சிறுமிகளின் அறைகளுக்கு அடிக்கடி தனியாக சென்றுள்ளார்' என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில்,"எனது கணவர் குற்றவாளியாக அறியப்பட்டால், பொதுவெளியில் அவரை தூக்கிலிடுவதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இருக்காது" என்று அமைச்சர் மஞ்சு வெர்மா தெரிவித்தார். இருப்பினும் எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தத்தால் மஞ்சு வெர்மா கடந்த 8-ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அவரது இல்லம் உட்பட 12 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.