சென்னை: விரைவு ரயிலில் பயணிக்க ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளுக்கும் இலவச பயணக் காப்பீடு வழங்கும் திட்டம் ஆகஸ்ட் 31ம் தேதியோடு விலக்கிக் கொள்ளப்படுகிறது.
செப்டம்பர் 1ம் தேதி முதல் ரயில்வேயின் இணையதளம் அல்லது செயலி மூலமாக ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர் பயணக் காப்பீடு தேவையா என்பதை தாங்களாகவே குறிப்பிட வேண்டும். இதுவரை அந்த வாய்ப்பு ஏற்கனவே டிக் ஆகியிருந்த நிலையில் அதில் மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் தங்களுக்கு ரயில் பயணக் காப்பீடு தேவையென்றால் அதற்காக ஒரு பயணிக்கு 1 ரூபாய் செலுத்த வேண்டும். அதாவது நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கூடுதலாக 4 ரூபாய் செலுத்த வேண்டியது இருக்கும்.
ப்ரீமியம் டிக்கெட்டுகளுக்கு இந்த ரயில் பயண காப்பீட்டுக்கு எவ்வளவுக் கட்டணம் என்பது இன்னமும் முடிவாகவில்லை.
இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் ரயில் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் அல்லது நிரந்தர ஊனமடையும் பயணியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்க வகை செய்யப்படும்.
இந்த ரயில்பயணக் காப்பீடு நேரடியாக கவுண்டர்களில் டிக்கெட் எடுப்பவர்களுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்து டிக்கெட் உறுதியானவர்களுக்கும் கிடையாது.
2016ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி ரயில் பயணிகளுக்கு இலவச பயணக் காப்பீடு திட்டத்தை ரயில்வே கொண்டு வந்தது. அது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.