நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுமானங்களில் செங்கல் பயன்படுத்துவதற்கு வருகிறது தடை?
நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுமானங்களில் இனி சுட்ட களிமண் செங்கல்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புது தில்லி: நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுமானங்களில் இனி சுட்ட களிமண் செங்கல்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் கட்டுமானங்களில் இனி சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே பயனப்டுத்த வேண்டும் என்பதற்கான பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த முன்முயற்சி எடுக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ள மத்திய கட்டுமான மற்றும் நகர விவகாரத்துறை அமைச்சகமானது, செங்கல் கொண்டு கட்டுமானங்கள் கட்டுவதைத் தடை செய்வது குறித்து விரிவான ஆய்வு செய்யுமாறு கோரியுள்ளது.
Advertisement
இதன் தொடர்ச்சியாக செங்கலைக் கட்டுமானப் பயன்பாட்டுக்குத் தடை செய்வதன் சாதக பாதகங்கள் குறித்து கருத்துகளை வரும் 11-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பொதுப்பணித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பாரம்பரியமாகக் களிமண், செம்மண் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்பட்டும் செங்கல்களாலும், செங்கற் சூளை போன்றவற்றாலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது என்று மத்திய அரசு கருதுகிறது.
அத்துடன் பல்வேறு வகையில் வீணாகும் பொருட்களைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த செங்கல்களை உருவாக்கும் நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இதன் மூலம் வீணாகும் பொருட்களைக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தலாம், சூழலையும் பாதுகாக்கலாம்.
எனவே இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.