இந்தியா

விஐபி ஹெலிகாப்டர் பேர வழக்கு: இடைத் தரகருக்கு மேலும் 5 நாள் சிபிஐ காவல்

DIN


விஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத் தரகர் கிறிஸ்டியன் மிசெல் ஜேம்ஸை மேலும் 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிப்பதற்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி வழங்கியது.
பிரிட்டனைச் சேர்ந்த மிசெல், விஐபி ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் அவர் இருப்பதை அறிந்த இந்திய அரசு, நாடு கடத்தும்படி அந்நாட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஐக்கிய அரபு அமீரக நீதிமன்றம், இந்தியாவுக்கு மிசெல்லை நாடு கடத்தும்படி உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 4ஆம் தேதி இரவு மிசெல் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அப்போது அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது. இந்த காவல் திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் முன்பு, கிறிஸ்டியன் மிசெல் ஜேம்ஸை சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை ஆஜர்படுத்தினர். 
அப்போது சிபிஐ சார்பில் வழக்குத் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் நீதிபதி முன்பு தாக்கல் செய்யப்பட்டன. மேலும் கிறிஸ்டியன் மிசெல் விசாரணையின்போது மழுப்பலான பதில்களை அளிப்பதாகவும், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாகவும் சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. கிறிஸ்டியன் மிசெல் ஜேம்ஸிடம் வழக்குத் தொடர்பாக மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், 9 நாள் காவலில் அவரை அனுமதிக்க வேண்டும் என்றும் சிபிஐ சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்க கூடாது என்று மிசெல் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அல்ஜோ கே ஜோசப் கோரிக்கை விடுத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அரவிந்த் குமார், கிறிஸ்டியன் மிசெலை மேலும் 5 நாள் காவலில் விசாரிப்பதற்கு சிபிஐ அமைப்புக்கு அனுமதியளித்தார். இதையடுத்து வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது மிசெல் சார்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை வாபஸ் பெறவும், புதிதாக ஜாமீன் மனுவை தாக்கல் செய்யவும் அனுமதி கோரப்பட்டது. இதற்கு நீதிபதி அனுமதியளித்தார். இதையடுத்து, பழைய ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டு, மிசெல் சார்பில் புதிய ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT