ஹைதராபாத்: தலித் பேராசிரியர் ஒருவரை முகநூலில் தரக்குறைவாக விமர்சனம் செய்த ஆய்வு மாணவரை, ஒரு வருடத்திற்கு பல்கலையிலிருந்து நீக்கம் செய்து ஹைதாராபாத் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
ஹைதாராபாத் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் லக்ஷ்மிநாராயணா. இதே பல்கலையில் வரலாற்றுத் துறையில் ஆய்வு மாணவராக இருப்பவர் கல்ராம் பல்சானியா. இவர் வலதுசாரி இயக்கமான ஆர்.எஸ்.எஸின் ஆதரவு பெற்ற மாணவர் இயக்கமான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் பல்கலை தலைவராகவும் இருக்கிறார்.
இந்நிலையில் பேராசிரியர் லக்ஷ்மிநாராயணா கடந்த ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழக தேர்வு ஒன்றின் பொழுது, 'கல்வித்துறையில் காவி மயம்' என்பது குறித்து கேள்வி ஒன்றைத் தாங்கிய கேள்வித் தாளை வடிவமைத்திருந்தார். இதன் காரணமாக பல்சானியா அவர் மீது ஆத்திரத்துடன் இருந்துள்ளார்.
அதன் வெளிப்பாடாக கடந்த நவம்பர் மாதம் பல்சானியா தனது முகநூல் பக்கத்தில் லக்ஷ்மிநாராயணாவை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் மற்றவர்களை மிரட்டியும் அச்சுறுத்தியும் பேராசிரியர் பதவிபெற்றுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். அவரது இந்த பதிவானது ஜனவரி மாத இறுதியில் மீண்டும் அனைவரது பார்வைக்கும் வந்தது. இதனைத் தொடர்ந்து பல்கலை வட்டாரத்தில் சர்ச்சை உண்டானது.
பேராசிரியர் லக்ஷ்மிநாராயணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் அப்பாராவ் மற்றும் செனட் உறுப்பினர்களிடம் இது தொடர்பாக புகார் அளித்தார். வேறு சில தலித் மாணவர் ஆதரவு இயக்கங்களும் பல்சானியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தின. இதன் தொடர்ச்சியாக ஓய்வு பெற்ற நீதிபதி, காவல்துறை உயர் அதிகாரி மற்றும் ஐந்து பேராசிரியர்கள் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
குழு விசாரணையின் முடிவில் பேராசிரியர் லக்ஷ்மிநாராயணாவை அவமதிக்கும் விதமாக பல்சானியா நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. பல்கலைக்கழகத்தினைச் சேர்நத யாரையும் இவ்வாறு நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குழு தெரிவித்துள்ளது.
இறுதியில் இந்த செயலுக்குத் தண்டனையாக பல்சானியாவை ஒரு வருடத்திற்கு பல்கலையிலிருந்து நீக்கம் செய்து ஹைதாராபாத் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு ரூ.30000 அபாரதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.