கொல்கத்தாவின் கிழக்கு மாநகரச் சாலையில் சிங்க்ரிங்கடா எனும் இடத்தில் உள்ள சிக்னல் அருகே இரண்டு கல்லூரி மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த பேருந்து மோதியது. பகல் 11.45 மணியளவில் நடந்த இவ்விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தை அடுத்து அங்கு கூடிய பொதுமக்கள், சாலைப் பாதுகாப்பை விடுத்து லஞ்சம் பெறுவதிலேயே போலிஸார் குறியாக இருப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அந்த இடத்தில் வன்முறை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த 5 பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது, போலிஸ் வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன.
இதையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். பின்னர் சிறிது நேரத்தில் நிலைமை காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
சம்பவ இடத்துக்கு நேரில் வந்த அப்பகுதி எம்எல்ஏ சுஜித் போஸ், அங்குள்ள சூழ்நிலை குறித்து ஆய்வு செய்தார். நடந்த சம்பவங்களை குறித்து கேட்டறிந்தார். நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு நிச்சயம் உதவி செய்யும் என்று கூறினார்.
இதனால் கொல்கத்தா நகரில் இருந்து சால்ட் லேக் பகுதியில் அமைந்துள்ள ஐடி செக்டாரை இணைக்கும் இந்த சாலையில் பல மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.