முகப்பு
இந்தியா

சிறையில் லாலுவை சந்தித்தார் சரத் யாதவ்

ஐக்கிய ஜனதாதளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அதிருப்தி தலைவர் சரத் யாதவ், திங்கள்கிழமை ராஞ்சி சிறையில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலுவை சந்தித்துப் பேசினார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

ஐக்கிய ஜனதாதளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அதிருப்தி தலைவர் சரத் யாதவ், திங்கள்கிழமை ராஞ்சி சிறையில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலுவை சந்தித்துப் பேசினார். மாநிலங்களவை உறுப்பினர் பதிவியை கேட்டுப் பெறும் நோக்கிலேயே லாலுவை, சரத் யாதவ் சந்தித்திருப்பதாக ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.
பிகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் நீரஜ் குமார்இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக சரத் யாதவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி அவரிடமிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பறிக்கப்பட்டது. தற்போது விரக்தியில் உள்ள அவர், பதவி பெறும் நோக்கத்திலேயே லாலுவை சிறைக்குச் சென்று சந்தித்துள்ளார் என்றார் அவர்.
நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் காங்கிரஸுடனான மகா கூட்டணியிலிருந்து விலகி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. லாலுவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டதற்கு ஐக்கிய ஜனதாதளத்தின் மற்றொரு முக்கியத் தலைவரான சரத் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அத்துடன் அவரிடமிருந்த மாநிலங்களை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது.
கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து ஆர்ஜேடி கட்சித் தலைவர் லாலு பிரசாத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் லாலுவை சரத் யாதவ் மட்டும் சந்திக்கவில்லை. கடந்த ஜனவரி மாதம் பாஜகவின் கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சியின் மாநிலத் தலைவர் பிருஷன் படேல், சிறையில் லாலுவை சந்தித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மற்றொரு அதிருப்தியாளர் தலைவரான உதய் நாராயண் சௌத்ரியும் லாலுவை சிறையில் சந்தித்துள்ளார்.
இதற்கிடையே, மத்திய அமைச்சரும் பாஜக கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சித் தலைவருமான உபேந்திர குஷ்வாஹாவும் லாலுவுடன் தொடர்பு கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

முழு கட்டுரையைப் படிக்க →