முகப்பு
இந்தியா

நமது ஏவுகணைகள் ராஜபாதையில் காட்சிக்கு வைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுமா?: மத்திய அரசுக்கு சிவசேனை கேள்வி

பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நமது ஏவுகணைகள் அனைத்தும் தில்லி ராஜபாதையில் காட்சிக்கு வைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுமா?

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நமது ஏவுகணைகள் அனைத்தும் தில்லி ராஜபாதையில் காட்சிக்கு வைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுமா? என்று மத்திய அரசுக்கு சிவசேனை கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ரௌத் கூறியதாவது:
இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை, ஏவுகணைகளைப் பயன்படுத்தியது. இந்த நிலையில், நமது ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா பயன்படுத்தாதா? தில்லி ராஜபாதையில் குடியரசு தினத்தன்று காட்சிக்கு வைப்பதற்கும் அங்கு திரண்டிருக்கும் மக்கள் கைதட்டி ரசிப்பதற்கு மட்டுமே நமது ஏவுகணை பயன்படுமா? அவை வெளிநாட்டுத் தலைவர்களின் பார்வைக்கு வைப்பதற்கு மட்டும்தானா?
பாகிஸ்தான் செய்வது வெறும் போர்நிறுத்த மீறல் அல்ல; மாறாக அந்நாடு நம் மீது போர் தொடுத்துள்ளது. அதற்கு மத்திய அரசு அதே ரீதியில் பதிலடி கொடுக்க வேண்டும். அவ்வாறு நாம் பதிலடி கொடுக்காவிட்டால் நம்மை ஆண்மையற்றவர்கள் என்று ஒட்டுமொத்த உலகமும் கருதி விடும் என்று சஞ்சய் ரௌத் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டையொட்டி பாகிஸ்தான் படையினர் ஞாயிற்றுக்கிழமை நடத்தி தாக்குதலில் ஒரு கேப்டன் உள்பட நான்கு இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்ட நிலையில், மத்திய அரசு மீதான சிவசேனை கட்சியின் விமர்சனம் வெளிவந்துள்ளது.
மேற்கண்ட தாக்குதலில் கேப்டன் கபில் குண்டு, ராணுவ வீரர்களான ராமாவதார், சுபம் சிங், ரோஷன் லால் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக நமது ராணுவ அதிகாரிகள் கூறுகையில் 'பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பூஞ்ச் மற்றும் ரஜௌரி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணியளவில் சிறிய ரக துப்பாக்கிகளைக் கொண்டுஅத்துமீறி நடத்தத் தொடங்கினர். ரஜௌரி மாவட்டத்தின் பிம்பேர் கலி பகுதியில் அவர்கள் கடும் தாக்குதல் நடத்தினர்' என்று தெரிவித்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →