உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரிலுள்ள அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது தொடர்பான வழக்கில், அந்த மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகித்து வந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு ஜாமீன் வழங்க அலாகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரே வாரத்தில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால், இந்த உயிரிழப்புகள் நேரிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இனிடையே, அந்த மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் விநியோகித்து வந்த நிறுவனத்தின் உரிமையாளர் மணீஷ் பண்டாரி, காவல்துறையினரால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். மருத்துவமனை சார்பில் தர வேண்டிய பாக்கித் தொகைக்காக, ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மணீஷ் பண்டாரி மனு தாக்கல் செய்தார். அந்த மனு, நீதிபதி யஷ்வந்த் வர்மா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மணீஷ் பண்டாரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது என்று காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. அதையேற்றுக் கொண்ட நீதிபதி, 'விசாரணையின் தற்போதைய கட்டத்தில் மணீஷ் பண்டாரியை ஜாமீன் விடுவிப்பது பொருத்தமாக இருக்காது' என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.