ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறையின் சம்மனுக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் வழக்கு
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த காலகட்டத்தில், மும்பையைச் சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீட்டை பெற, அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில், அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டதாகவும், அதற்கு பிரதிபலனாக அவருக்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் லஞ்சம் அளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளது.
மேலும் இவ்விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.