பாட்னா: 29-வயது பொறியாளரை கடத்திய பெண் வீட்டார் துப்பாக்கி முனையில் அவரை மிரட்டி பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட வைத்த சம்பவம் பிகாரில் உள்ள பாட்னாவில் நடந்தேறி உள்ளது.
பொகரோ ஸ்டீல் பிளாண்டில் பொறியாளராகப் பணி புரியும் விநோத் என்னும் இளைஞரை வற்புறுத்தி திருமண சடங்குகளைச் செய்ய வைத்துள்ளனர் பெண்ணின் உறவினர்கள். தன்னை விட்டு விடும்படி விநோத் கதறியும் அவரைத் துப்பாக்கியை காட்டி அவர்கள் மிரட்டி உள்ளனர். இந்தச் சம்பவம் முழுவதும் விடியோ பதிவும் செய்யப் பட்டுள்ளது.
அந்த விடியோவில் பெண்ணின் உறவினர்கள் “நாங்கள் உனக்குத் திருமணம் தான் செய்து வைக்கிறோம், ஒன்றும் உன்னைத் தூக்கில் தொங்கவிடவில்லை” என்று மணமகனிடம் சொல்கிறார்கள்.
கடந்த டிசம்பர் மாதம் 3-தேதி வெறு ஒருவரின் திருமணத்திற்கு சென்றிருந்த இடத்தில் பெண்ணின் அண்ணன் சுரேந்திர யாதவ் விநோத்திடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவரைக் கடத்தியுள்ளனர். பின்னர் அவரை வற்புறுத்தி திருமணமும் செய்து வைத்துள்ளனர்.
விநோத் குறித்த நேரத்தில் வீடு திரும்பாததால் அவரது சகோதரன் சஞ்சய் குமார் கவலை உற்றிருந்த நிலையில் வந்த தொலைப்பேசி அழைப்பில் அவருக்குத் திருமணம் நடந்துவிட்டதாக யாரோ தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து காவல் துறையில் புகார் ஏதும் கொடுக்கக் கூடாது என்றும், பெண்ணை மருமகளாக ஏற்றுக் கொள்ளுமாறும் விநோத்தின் குடும்பத்தினரை மிரட்டி இருக்கிறார்கள். இதனால் செய்வது அறியாமல் தவித்த இவர்கள் இறுதியில் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூடிய விரைவில் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் என்றும் பாட்னா காவல் துறை நம்பிக்க தெரிவித்துள்ளது.