முகப்பு
இந்தியா

புராரி மரணம் தற்கொலை? 11 பேரில் 6 பேர் போராடி இறக்கவில்லை என பிரேத பரிசோதனையில் தகவல்

வடக்கு தில்லியில் உள்ள புராரியை அடுத்த சந்த் நகரில் ஒரே குடும்பத்தில் 7 பெண்கள் உள்பட 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பிரேத பரிசோதனை அறிக்கைகள் வெளியாகி வருகின்றன.

Updated On : 2 ஜூலை, 2018 at 1:38 PM
பகிர்:

புது தில்லி: வடக்கு தில்லியில் உள்ள புராரியை அடுத்த சந்த் நகரில் ஒரே குடும்பத்தில் 7 பெண்கள் உள்பட 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பிரேத பரிசோதனை அறிக்கைகள் வெளியாகி வருகின்றன.

அதன் அடிப்படையில், 11 பேரில் 6 பேரின் உடல்களுக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், அவர்கள் யாரும் போராடி இறந்ததற்கான தடயம் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக போலீஸ் கூறியுள்ளது.

இறந்தவர்களில் 2 குழந்தைகள் உட்பட 6 பேருக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், அவர்கள் உயிரிழப்பதற்கு முன்பு போராடியதற்கோ, துடிதுடித்ததற்கோ எந்த தடயமும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

Advertisement

இதையடுத்தே, 11 பேரும் கொலை செய்யப்படவில்லை என்றும், தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் காவல்துறையினர் கருதுகின்றனர்.

சம்பவத்தின் பின்னணி: புராரியை அடுத்த சந்த் நகர் இரண்டாவது தெருவில் உள்ள குடியிருப்பின் முதலாவது மாடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் வசித்து வந்தனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக புராரி காவல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது.

அங்கு விரைந்து சென்ற போலீஸார் 4 ஆண்கள், 6 பெண்கள் உள்ளிட்டோர் தூக்கிட்ட நிலையில் இருப்பதையும், வயதான பெண்மணி ஒருவர் பக்கத்து அறையில் படுத்த நிலையில் இறந்து கிடந்ததையும் கண்டறிந்தனர்.

அவர்கள் நாராயண் தேவி (77), அவரது மகன்கள் புவனேஷ் (50), லலித் (45), மருமகள்கள் சவிதா (48), தீனா (42), நாராயண் தேவியின் மகள் பிரதீபா (57), பேரன், பேத்திகளான பிரியங்கா (33), நீத்து (25), மோனு (23), துருவ் (15), சிவம் (15) ஆகியோர் எனத் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனிடையே, தில்லி காவல் துறையின் குற்றத் தடுப்புப் பிரிவினர், தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு அந்த வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சம்பவம் நடைபெற்ற வீட்டில் எவ்வித சூறையாடலோ, விலை மதிப்புமிக்க பொருள்களான செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை எனக் கண்டறியப்பட்டது. பெண் சடலங்களில் தங்க நகைகள் அப்படியே இருந்தன. வீட்டில் கையால் எழுதப்பட்ட சில குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டன.

ஆன்மிகம் அல்லது கடவுளின் மாயையை அறிய முற்படுவது தொடர்பாக அக்குடும்பம் பின்பற்றி வந்துள்ளது அந்தக் குறிப்புகளின் மூலம் தெரியவந்துள்ளது. அந்தக் குறிப்புகளுக்கும், இறந்தவர்களின் கைகளும், வாயும் டேப்பால் ஒட்டப்படிருந்ததற்கு ஆணித்தரமான தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டன. இந்த வழக்கு விசாரணை தில்லி காவல்துறையின் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனிடையே, கைப்பற்றப்பட்ட சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.