ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி, செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனிடையே ப.சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் வரும் ஆகஸ்டு 1-ஆம் தேதி வரை கைது செய்ய தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. முன்னதாக, இவ்வழக்கில் இருந்து ப.சிதம்பரத்துக்கு பிணை வழங்க சிபிஐ மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறுகையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் பொய் கூறி வருகிறார். மேலும் இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ எழுப்பும் கேள்விகளுக்கு பதில் தர மறுக்கிறார். அதுமட்டுமல்லாமல் இது சம்பந்தமான அனைத்து விவகாரங்களையும் திசை திருப்பி வருகிறார்.
இதில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தில்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது தற்காலிகமான ஒன்றுதான். எனவே ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.