முகப்பு
இந்தியா

புராரி மரணம்: கடைசியாக உணவு கொண்டு வந்தவரிடம் காவல்துறை விசாரணை

தில்லி காவல்துறையினருக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கும் புராரி மரணம் தொடர்பான வழக்கில், சுமார் 20 உறவினர்களிடமும், உணவு கொண்டு வந்த நபரிடமும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Updated On : 4 ஜூலை, 2018 at 12:43 PM
பகிர்:


புது தில்லி: தில்லி காவல்துறையினருக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கும் புராரி மரணம் தொடர்பான வழக்கில், சுமார் 20 உறவினர்களிடமும், உணவு கொண்டு வந்த நபரிடமும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மரணம் அடைந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், அவர்களது உறவினர்கள் 20 பேரிடம் விசாரணை நடத்தினார்கள்.

இந்த மரணத்தில், தன்னைத் தானே சாமியார் என்று தெரிவித்துக் கொள்ளும் நபர்களின் தலையீடு இருந்ததா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறார்கள்.

Advertisement

இந்த குடும்பத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்ட ஏதேனும் ஒரு நம்பிக்கை, மற்றவர்களுக்கும் மூளைச்சலவை செய்யப்பட்டு இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த வீட்டில் ஒரு விநோதமான தடயமும் கிடைத்துள்ளது. அதாவது ஒரே சுவரில் 11 பைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 4 பைப்புகள் நேர் பைப்புகளாகவும், 7 பைப்புகள் வளைந்த பைப்புகளாகவும் உள்ளன. இது மரணித்தவர்களில் 4 பெண்கள், 7 ஆண்கள் என்ற எண்ணோடு ஒத்துப்போவதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இது குறித்து கட்டுமானப் பொறியாளரிடம் விசாரித்ததில், காற்றோட்டத்துக்காக இதனை அமைக்கச் சொன்னதாகவும், ஜன்னல் வைக்க யோசனை கூறியும், பிறகு அது பற்றி பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜூன் 30ம் தேதி அன்று இரவு 20 சப்பாத்திகளை இந்த குடும்பத்தினர் வெளியில் இருந்து வாங்கியுள்ளனர். அன்று இரவு மரணித்தவர்களை கடைசியாக பார்த்தவர் உணவைக் கொண்டு வந்து கொடுத்த டெலிவரி பாய். அவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர்.

அக்கம் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடமும் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். மரணித்தவர்கள் யாரும், தற்கொலை செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற அறிகுறியுடன் தென்படவில்லை என்றும், தற்கொலை செய்து கொள்ளும் நபர்களுக்கான எந்த நடவடிக்கையும் அவர்களிடம் காணப்படவில்லை என்றும் நெருங்கிப் பழகியவர்கள் கூறியுள்ளனர்.

பல்வேறு தரப்பில் இருந்தும் கிடைக்கப் பெற்றிருக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கில் ஏராளமான முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்பட வேண்டியது இருப்பதை காவல்துறையினர் உணர்ந்தே உள்ளனர்.

மரணித்தவர்களில் லலித் பாட்டியா (45) மட்டுமே அடிக்கடி இறைவனை சேறுதல், மரணம் தொடர்பாக பேசி வந்திருப்பதும், மற்றவர்களையும் இது குறித்து மூளைச் சலவை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. எனவே, அதன் அடிப்படையிலும் விசாரணை நீள்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.