உ.பி.: சிறைக்குள் பிரபல தாதா சுட்டுக் கொலை
உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல தாதா முன்னா பஜ்ரங்கி, சிறைக்குள் மற்றொரு தாதாவால் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல தாதா முன்னா பஜ்ரங்கி, சிறைக்குள் மற்றொரு தாதாவால் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், சிறை அதிகாரிகள் 4 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது:
பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ லோகேஷ் தீக்ஷித்திடம் 2017-ஆம் ஆண்டில் பணம் பறிக்க முயற்சித்த வழக்கில், பாக்பத் மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்துவதற்காக ஜான்சி மாவட்ட சிறையிலிருந்து முன்னா ஞாயிற்றுக்கிழமை அழைத்து வரப்பட்டார். அங்கு 10 கைதிகளுடன் ஒரே அறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், பாக்பத் சிறையில் ஏற்கெனவே அடைக்கப்பட்டிருந்த மற்றொரு தாதா சுனில் ரதிக்கும், முன்னாவுக்கும் திங்கள்கிழமை மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், முன்னாவை சுனில் சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர், துப்பாக்கியை சாக்கடைக்குள் சுனில் தூக்கியெறிந்துவிட்டார். அவரிடம் துப்பாக்கி எப்படி வந்தது என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
4 அதிகாரிகள் பணியிடைநீக்கம்: இச்சம்பவம் தொடர்பாக, சிறைக் காவலர் உதய் பிரதாப் சிங், துணை சிறைக் காவலர் சிவாஜி யாதவ், தலைமைப் பாதுகாவலர் அர்ஜீந்தர் சிங், பாதுகாவலர் மாதவ் குமார் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநில உள்துறை முதன்மைச் செயலர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு உத்தரவு: சுட்டுக் கொல்லப்பட்ட தாதா முன்னா பஜ்ரங்கி (51), முன்னாள் பாஜக எம்எல்ஏ கிருஷ்ணநாத் ராய் கொலை உள்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர். அவரை போலி என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக் கொல்ல சதி நடப்பதாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் 10 நாள்களுக்கு முன்பு முன்னாவின் மனைவி சீமா சிங் கூறியிருந்தார்.
இந்த சூழலில், சிறைக்குள் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.