முகப்பு
இந்தியா

தேசிய பசுமைத் தீர்ப்பாய தலைவராக நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் பதவியேற்பு

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (என்ஜிடி) தலைவராக நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் திங்கள்கிழமை பதவியேற்றார்.

Updated On : 10 ஜூலை, 2018 at 1:14 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (என்ஜிடி) தலைவராக நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் திங்கள்கிழமை பதவியேற்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனங்கள் மற்றும் இதர வளங்களை பாதுகாப்பது தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 2010-இல் உருவாக்கப்பட்டது. அதன் முதன்மை அமர்வு, தில்லியில் செயல்படுகிறது. மண்டல அமர்வுகள் போபால், புணே, கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் செயல்படுகின்றன.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதல் தலைவராக நீதிபதி லோகேஷ்வர் சிங் பொறுப்பேற்றார். அவர், கடந்த 2011-இல் ஹிமாசலப் பிரதேச லோக் ஆயுக்த தலைவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, பசுமைத் தீர்ப்பாய தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து, தீர்ப்பாய தலைவராக பதவியேற்ற ஸ்வதந்தர் குமார், 5 ஆண்டு பணிக் காலத்தை நிறைவு செய்து, கடந்த ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற்றார். அதன்பின், நீதிபதிகள் உமேஷ் தத்தாத்ரேய சால்வி, ஜாவத் ரஹீம் ஆகியோர் பொறுப்பு தலைவர்களாக அடுத்தடுத்து நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து கடந்த 6-ஆம் தேதி ஓய்வு பெற்றவரான இவர், பசுமைத் தீர்ப்பாய தலைவராக திங்கள்கிழமை பதவியேற்றார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இப்பதவியை கோயல் வகிப்பார். காற்று மாசு பிரச்னை, கங்கை, யமுனை நதிகளை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் பசுமைத் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.