தொடரும் மருத்துவமனை அலட்சியங்கள்: தாயின் பிணத்தை மோட்டார் சைக்கிளில் சுமந்து வந்த மகன்
மத்திய பிரதேசத்தில் அமரர் ஊர்தி அனுப்ப மறுத்த மருத்துவமனையின் அலட்சியத்தின் காரணமாக, தனது தாயின் பிணத்தை மகன் மோட்டார் சைக்கிளில் சுமந்து வந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
திகம்கார்: மத்திய பிரதேசத்தில் அமரர் ஊர்தி அனுப்ப மறுத்த மருத்துவமனையின் அலட்சியத்தின் காரணமாக, தனது தாயின் பிணத்தை மகன் மோட்டார் சைக்கிளில் சுமந்து வந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் மோகன்கர் மாவட்டத்தில் உள்ள திகம்கார் என்ற ஊரைச் சேர்ந்தவர் குன்வர் பாய். பாம்பு கடித்ததன் காரணமாக திங்கள்கிழமைஅன்று இவர் மரணமடைந்தார். பிரேதப் பரிசோதனை செய்வதற்காக மோகன்கர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு குன்வர் பாய் குடும்பத்தினர் தகவல் அளித்தனர். ஆனால் மருத்துவமனை தரப்பிலிருந்து அமரர் ஊர்தி அனுப்ப இயலாது என்று மறுத்து விட்டதாகத் தெரிகிறது.
இதன் காரணமாக வேறுவழியில்லாத குன்வர் பாயின் மகன் தனது தாயின் பிணத்தினை மோட்டார் சைக்கிளொன்றில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார். இதுதொடர்பான விடியோவானது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படுகிறது.
Advertisement
இதுதொடர்பாக மாவட்ட முதன்மை ஆளுநர் அஹிர்வர் செய்தியாளர்களிடம், 'எனக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டிருக்கிறேன். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்' என்று தெரிவித்தார்.
மருத்துவ வசதிகள் சரியாக சென்று சேராத நிலையானது நாட்டில் இன்றும் நிலவுவதை இத்தகைய சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.