முகப்பு
இந்தியா

பிகார் மகளிர் காப்பகத்தில் 21 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை

பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் அரசு நிதியுதவி பெறும் மகளிர் காப்பகத்தில் 16 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 23 ஜூலை, 2018 at 5:35 PM
பகிர்:

பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் அரசு நிதியுதவி பெறும் மகளிர் காப்பகத்தில் 16 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

பிகார் மாநிலம் முசாஃபர்பூரில் அரசு நிதியுதவியுடன் மகளிர் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தில் 44 சிறுமிகள் தங்கி வந்தனர். இந்த 44 சிறுமிகளில் பாதிக்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதையடுத்து, அங்கு இருக்கும் 44 சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், 21 சிறுமிகளின் மருத்துவப் பரிசோதனையின் அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், 21 சிறுமிகளில் 16 சிறுமிகள் பல்வேறு காலகட்டங்களில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. 

Advertisement

இதையடுத்து, அந்த காப்பகத்துக்கு விரைந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த சிறுமி ஒருவர் போலீஸாரிடம், அங்குள்ள அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்த சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு அந்த காப்பகத்தின் பின்புறத்தில் புதைக்கப்பட்டுவிட்டதாக கூறினார். இதன் அடிப்படையில், அங்கு போலீஸார் சிறுமியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த காப்பகம் தற்போது மூடப்பட்டுள்ளது. அங்குள்ள சிறுமிகள் வேறு  பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த காப்பகம் அரசு நிதியுதவியுடன் நடைபெற்று வந்ததால் பிகாரில் மிகப் பெரிய அரசியல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஷ்வி யாதவ் கூறுகையில், "இந்த காப்பகத்தின் உரிமையாளர் முதல்வர் நிதிஷ் குமாருக்கு நெருக்கமானவர். அவர் தேர்தல் பிரச்சாரங்களில் கூட வாக்கு சேகரித்துள்ளார். அதனால், இந்த வழக்கில் சரியான விசாரனை நிச்சயம் தேவை" என்றார்.

அதேசமயம், "இந்த வழக்கில் சரியான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் மங்கள் பாண்டே உறுதியளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.