முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் 'காலா' படத்தை திரையிட பாதுகாப்பு: மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கர்நாடகத்தில் 'காலா' திரைப்படத்தை திரையிடுவதற்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு அந்த மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

கர்நாடகத்தில் 'காலா' திரைப்படத்தை திரையிடுவதற்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு அந்த மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகரும், அப்படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதை ஏற்றுக்க கொண்ட மாநில அரசு, 'காலா' படம் திரையிடும் இடங்களில் பாதுகாப்பு வழங்குவதாக உறுதியளித்தது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வியாழக்கிழமை உலகமெங்கும் வெளியாக உள்ள 'காலா' படத்துக்கு பல்வேறு மாநில ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதேவேளையில், கர்நாடகத்தில் சில அமைப்புகள் அப்படத்தை திரையிடக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
காவிரி நதி நீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் கர்நாடகத்துக்கு எதிராக ரஜினிகாந்த் கருத்து கூறியதே அதற்கு காரணம்.
இந்நிலையில், இதுதொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தனுஷ் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 'காலா' படத்தை திரையிடுவதற்கு உரிய பாதுகாப்பளிக்க உத்தரவிட வேண்டும் என்று அதில் அவர் வலியுறுத்தியிருந்தார். அந்த மனு, நீதிபதி ஜி.நரேந்தர் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மற்றும் கர்நாடக அரசுத் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றைக் கேட்டறிந்த பிறகு நீதிபதி கூறியதாவது: சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான 'பத்மாவத்' திரைப்படத்தை வெளியிடும்போதும் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. சில மாநிலங்களில் அப்படத்துக்கு தடையும் விதிக்கப்பட்டது. ஆனால், அந்த விவகாரத்தை விசாரித்த உச்ச நீதிமன்றம் கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு எனக் கூறி அந்தத் தடையை ரத்து செய்தது.
'காலா' திரைப்படத்தையும் அதே கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டும். எனவே, அப்படத்தை திரையிடுவதற்கு உரிய பாதுகாப்பை மாநில அரசு அளிக்க வேண்டும் என்றார் நீதிபதி.
அதை ஏற்றுக் கொண்ட மாநில அரசு தரப்பு, ஏற்கெனவே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது.
முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு
'காலா' திரைப்படத்துக்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், அப்படத்தை கர்நாடகத்தில் வெளியிடாமல் இருப்பதே நல்லது என்று அந்த மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: 'காலா' திரைப்படத்தைத் திரையிடும் திரையரங்கிற்குள் மக்கள் வருவதற்கு அச்சப்படும் நிலையில், அப்படத்தை வெளியிடுவதில் அர்த்தமில்லை. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மாநில அரசு பின்பற்றும் என்றாலும், தற்போதைய சூழலில் அப்படத்தை வெளியிடாமல் இருப்பதே சிறந்தது என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →